உண்ணும் உணவிலும், பருகும்
தண்ணீரிலும் சுத்தமும், சுகாதாரமும், பாதுகாப்பும் மிக முக்கியம். மக்கள்
மத்தியில் இது குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் பெருகிவருவது நல்லதொரு
அறிகுறி. இதுவும் அத்தகையதோர் நிகழ்வுதான்:
தமிழகத்தில்
857 குடிநீர் கேன் விற்பனை நிலையங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான
நிறுவனங்கள் அரசு அனுமதி பெறாமல் இயங்கி வந்தன. மக்களுக்கு தரமற்ற குடிநீர்
வழங்குவதாக இந்த நிறுவனங்கள் மீது புகார்கள் எழுந்தன. இதனை கருத்தில்
கொண்டு கடந்த மே மாதம் அரும்பாக்கத்தில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை
தீர்ப்பாயம் தானே முன்வந்து இந்த வழக்கை பதிவு செய்து விசாரித்தது.
இந்த
வழக்கு கடந்த அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சொக்கலிங்கம்
குடிநீர் கேன் நிறுவனங்கள் மீது மாசுகட்டுபாடு வாரியம், பொதுப்பணித்துறை,
உணவு பாதுகாப்பு துறை அனுமதி பெற்று, பின்னர் விற்பனை செய்ய வேண்டும்
என்றார். மாசுகட்டுப்பாடு வாரியம் இந்த நிறுவனங்களுக்கு நிபந்தனை
அடிப்படையில் தடையில்லா சான்று வழங்கவும் உத்தரவிட்டார்.
மீண்டும்
இந்த வழக்கு கடந்த நவம்பர் 9ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது 40க்கு
மேற்பட்ட குடிநீர் நிறுவனங்கள் நிபந்தனையை தளர்த்த கோரிக்கை வைத்தனர்.
ஆனால், நீதிபதி அந்த கோரிக்கையை நிராகரித்தார். மேலும் மாசுகட்டுப்பாடு
வாரியம் மெத்தனமாக இருக்க கூடாது. உடனே இந்த நிறுவனங்கள் மீது உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கை
ஜனவரி 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அதன்
அடிப்படையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,
குடிநீர் விற்பனை நிறுவனங்கள், பொதுப்பணி துறை சான்று பெறும் நிபந்தனையை
தளர்த்த கோரினர். அந்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். பின்னர்,
சென்னையில் மெட்ரோ வாட்டரை இந்த நிறுவனங்கள் பயன்படுத்துவதால், சென்னையில்
உள்ள நிறுவனங்கள் சென்னையில் குடிநீர் வாரிய அதிகாரிகளிடமும், புறநகர்
பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் பொதுப்பணித் துறையிடமும் கண்டிப்பாக
விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்க தவறிய குடிநீர் நிறுவனங்கள்
உடனடியாக சீல் வைக்கப்படும் என கூறினார்.
No comments:
Post a Comment