கறிக்கோழி சாப்பிடும் சிறுவர்களுக்கு மார்பு வீக்க நோய் ஏற்படும் அபாயம்

மதுரை, ஜன. 2:
கறிக்கோழி சாப்பிடும் சிறுவர்களுக்கு மார்பு வீக்க நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகரித்து வரும் மக்கள்தொகை பெருக்கத்திற்கேற்ப உணவுத்தேவையும் அதிகரித்து வருகிறது. இதனை சமாளிக்க விஞ்ஞானத்தின் பெயரால், இயற்கையை மீறி பல்வேறு வழிமுறைகளில் உணவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. அவற்றில் ஒன்றுதான் பிராய்லர் கோழி எனப்படும் கறிக்கோழி. இந்த கோழிகள் கறிக்காக மட்டுமே வளர்க்கப்படுகிறது. வேகமாக வளர்வதற்காக கோழிகளுக்கு ஈஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் ஊசி போடப்படுகிறது.
இந்த ஈஸ்ட்ரோஜென் ஊசி, செல்களை வேகமாக வளரவைத்து கோழியின் எடையை அதிகமாக்குகிறது. பண்ணை வைத்துள்ள ஒரு சிலர் குறுகிய லாப நோக்கத்தோடு ஈஸ்ட்ரோஜென் மருந்துகளை கோழிகளுக்கு அதிகளவில் கொடுத்து விடுகின்றனர்.
இதனால் பிராய்லர் கோழிக்கறி அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாம் காலையில் எழுந்து, இரவு தூங்கும் வரை செய்யும் ஒவ்வொரு வேலையிலும் ஹார்மோன்களின் பங்கு மிகவும் முக்கியமானது. மனித உடலில் இன்சுலின், பிட்யூட்டரி, ஈஸ்ட்ரோஜென், புரஜ்சக்ஸ்ட்ரான் என 30க்கும் மேற்பட்ட ஹார்மோன்கள் சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முக்கியமான வேலையை செய்துவருகிறது. இவை அனைத்தும் மனித உடலில் தேவையான அளவு இருந்தே ஆக வேண்டும். ஏதேனும் ஒரு ஹார்மோன் சுரக்காமல் குறைந்தாலோ அல்லது தேவையை விட அதிமானாலோ உடலில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.
இவற்றில் புரஜ்சக்ஸ்ட்ரான் ஹார்மோன்கள் ஆண்களுக்கும், ஈஸ்ட்ரோஜென் பெண்களுக்கும் 2ம் நிலை பால் வேறுபாட்டை பிரிக்கிறது. அதாவது இருபாலருக்கும் உடல் உறுப்புகளில் மாற்றங்களையும், உணர்வுகளையும் ஏற்படுத்துகிறது. புரஜ்சக்ஸ்ட்ரான் ஹார்மோன்கள் பெண்களுக்கு அதிகம் சுரந்தால் முகத்தில் முடி வளர்வது உள்ளிட்ட பிரச்னைகளும், ஈஸ்ட்ரோஜென் ஆண்களுக்கு அதிகம் சுரந்தால் கைனக்கோமாஸ்ட்ரோ எனப்படும் மார்பு வீக்க நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உண்டாகிறது. கறிக்கோழிகளில் போடப்படும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் சமைத்த பின்னரும் நிலைமாற்றமில்லாமல் உடலுக்குள் செல்வதால், இருபாலருக்கும் உடலில் பிரச்னைகள் ஏற்படுகின்றது.
மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவத்துறை உதவிப்பேராசிரியர் ஒருவர் கூறுகையில், “உணவுப்பொருட்களில் உள்ள ஈஸ்ட்ரோஜென் சமைத்த பின்னரும் உணவில் கலந்தே இருக்கும் என ஆய்வில் தெரிந்துள்ளது. ஈஸ்ட்ரோஜென் உடலில் தேவையை விட அதிகரிக்கும் போது பெண் குழந்தைகள் சிறுவயதில் பூப்பெய்தல், கர்ப்பப்பை புற்று நோய், உடல் பருத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. ஆண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் அதிகரிக்கும் போது கைனக்கோ மாஸ்ட்ரோ எனப்படும் மார்பக வீக்கநோய் ஏற்படுகிறது. ஆண்களுக்கு மார்பில் வீக்கம் ஏற்பட்டு வலி ஏற்படும். அதேபோல் ஆண்களிடம் பெண் தன்மை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே ஈஸ்ட்ரோஜென் பயன்படுத்தப்படும் உணவுப்பொருட்களை குறைத்துக்கொள்வது நல்லது,” என்றார்.

No comments:

Post a Comment