அயோடின் கலந்த உப்பு விற்பனை: ஆறு மாதங்களுக்கு பிறகே கட்டாயம்

சென்னை: ''அயோடின் கலந்த உப்பை மட்டுமே விற்பனை செய்யவேண்டும் என்பதற்கான, கால நிர்ணயம் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது,'' என, உப்புத் துறை கமிஷனர், காசியா கூறினார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: உலகளவில், உப்பு உற்பத்தியில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்து, இந்தியா உள்ளது. தற்போது, 2.5 கோடி டன் உப்பு, ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 1.8 கோடி டன் உப்பு, உள்நாட்டில் உபயோகிக்கப்படுகிறது. ஐம்பது லட்சம் டன் உப்பு, ஏற்றுமதியாகிறது. மீதமுள்ள உப்பு, அசாதாரண காலங்களில் ஏற்படும் இழப்பை பூர்த்தி செய்ய இருப்பு வைக்கப்படுகிறது. இந்தியாவில், 1.37 கோடி ஏக்கர் பரப்பு, உப்பு உற்பத்தி செய்யும் நிலமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலப் பரப்பில், 50 சதவீதத்துக்கும் குறைவான பரப்பே, இதுவரை பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், 2020ல், நான்கு கோடி டன், உப்பை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியை, ஒரு கோடி டன்னாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளோம். உப்பு தொழிலில் தற்போது சில நெருக்கடிகள் நிலவுகின்றன. இவற்றை தீர்க்க, இந்திய உப்பு உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், தொழிற்சாலை உப்பு உபயோகிப்பாளர்கள் மற்றும் இயந்திர கட்டுமான நிறுவனத்தினருடன், அரசு ஆலோசிக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டம், சென்னையில் இன்று நடக்கிறது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர், சுதர்சன நாச்சியப்பன் பங்கேற்கிறார். நாட்டில், அயோடின் கலந்த உப்பை மட்டுமே விற்பனை செய்யவேண்டும். 'இந்த உத்தரவை, பிப்ரவரி, 4ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும்' என, அரசு உத்தரவிட்டது. உப்பு உற்பத்தியில் நிலவும் பல்வேறு இடர்பாடுகளை சுட்டிக்காட்டி, 'கால நீட்டிப்பு வேண்டும்' என, உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையேற்று, அயோடின் கலந்த உப்பு விற்பனையை கட்டாயமாக்குவது, ஆறு மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, காசியா கூறினார்.

No comments:

Post a Comment