நீலகிரியில் கலப்பட தேயிலை தூள் பயன்பாடு அதிகரிப்பு

ஊட்டி, : நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான டீ கடைகளில் கலப்பட தேயிலை தூள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தரமான தேயிலை தூளை மொத்தமாவோ அல்லது சில்லறையாகவோ பலர் வாங்கி சென்று சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீப காலமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள டீ கடைகளில் சாயம் கலந்த கலப்பட தேயிலை தூளை பயன்படுத்தி வருகின்றனர். தரமான தேயிலை தூளை வாங்கி அதில் மரத்தூள், புளியங்கொட்டை போன்றவற்றை அரைத்து கலந்து விடுகின்றனர்.
சிலர் டிக்காஷன் வருவதற்காக சாயப்பொடிகளை கலந்து டீ தயாரிக்கின்றனர். குறிப்பாக ஊட்டி பஸ் நிலையம், ஏ.டிசி., மற்றும் சுற்றுலா தளங்களில் உள்ள டீ கடைகளிலும், ஊட்டி நகரில் உள்ள ஒரு சில ஆவின் பூத்களிலும் டீ தயாரிக்க கலப்பட தேயிலை தூள் தாராளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கலப்பட தேயிலை தூளில் தயாரிக்கப்பட்ட டீயை தொடர்ந்து அருந்தினால் புற்றுநோய், சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உடல் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கலப்பட தேயிலை தூளை கட்டுபடுத்த தேயிலை வாரியம் மற்றும் உணவு தரக்கட்டுப்பாட்டுத்துறை கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் தேயிலை உற்பத்தி செய்யும் நீலகிரி மாவட்டத்திலேயே கலப்பட தேயிலையின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நீலகிரியில் கோடை சீசன் துவங்க உள்ள நிலையில், தற்போது பெருகி வரும் கலப்பட தேயிலை தூளின் தாக்கத்தை கட்டுபடுத்த விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கலப்பட தேயிலை தூள் பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், கடைகளின் உரிமத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். தவறும் பட்சத்தில் மக்கள் மத்தியில் நீலகிரி தேயிலைக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment