கொடுங்கையூர் குப்பை கிடங்கில் புகையிலை பொருட்கள்–போலி டீத்தூள் குழிதோண்டி புதைப்பு

ராயபுரம்,
சென்னை சவுகார்பேட்டை வரதமுத்தையா தெருவில் உள்ள தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 550 கிலோ பான் பராக், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை
கடந்த மாதம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். நேற்று முன்தினம் சென்னை எம்.கே.பி. நகரில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையின் போது லோடு ஆட்டோவில் எடுத்து வரப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 100 கிலோ பான் பராக், குட்கா புகையிலை பொருட்களை கைப்பற்றி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் சென்னை பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் உள்ள தனியார் குடோனில் கடந்த டிசம்பர் மாதம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அங்கிருந்த 500 கிலோ மதிப்புள்ள போலி டீ தூள் பாக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
இவ்வாறு பறிமுதலான 650 கிலோ புகையிலை பொருட்கள், 500 கிலோ போலி டீத்தூள் பாக்கெட்டுகள் ஆகியவற்றை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று கொடுங்கையூர், மணலி நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் குழி தோண்டி புதைத்து அழித்தனர்.

No comments:

Post a Comment